Tuesday, March 11, 2014

மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் நீடிப்பு: நான்காவது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை

கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து, 239 பேருடன், சீனாவுக்கு சென்ற பயணிகள் விமானம் மாயமாகி, மூன்று நாட்களாகியும், அதன் கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து, 7ம் தேதி இரவு, இந்திய நேரப்படி, 11:10 மணிக்கு, சீன தலைநகர், பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில், 227 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட, இரண்டு மணி நேரத்திற்கு பின், விமானம், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் நிலை குறித்து, தீவிரமாக ஆராய்ந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின், வியட்னாம் நாட்டின், பூ குயாக் தீவுக்கு அருகே, தென் சீனக் கடலில், எண்ணெய் படலங்கள் தென்பட்டன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கடலில் விழுந்ததால் இந்த எண்ணெய் படலம் ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது. விமானத்தில், 152 சீனர்களும், மலேசிய நாட்டவர், 38 பேரும், இந்தியர்கள், ஐந்து பேரும், இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள், ஆறு பேரும், பிரான்ஸ் நாட்டினர், மூன்று பேரும், அமெரிக்கர்கள், நான்கு பேரும், நியூசிலாந்தை சேர்ந்த, இருவரும், உக்ரைன் நாட்டவர், இரண்டு பேரும், கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இருவரும், ரஷ்யா, தைவான், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா, ஒருவரும் பயணித்துள்ளனர். இந்தியர்கள் ஐந்து பேரில், ஒருவர், சென்னையைச் சேர்ந்த, சந்திரிகா சர்மா. மங்கோலியா நாட்டில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன செயலர், சந்திரிகா சர்மா இந்த விமானத்தில் பயணித்து உள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பேரன் முக்தேஷ், 47. இவருடைய மனைவி ஜானா, 37. கனடா நாட்டில் வசித்த இவர்கள், வர்த்தக விஷயமாக இந்த விமானத்தில், சீனாவுக்கு பயணமாகியுள்ளனர்.


மர்மம் நீடிப்பு: நான்கு நாட்களாகியும், விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானத்தைக் கண்டறியும் முயற்சியில், அமெரிக்க புலனாய்வு நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மலேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் பாஸ்போர்ட் விவரங்களை ஆராய்ந்தனர்.
இதற்கிடையே, இவ்விமானத்தில் பயணித்ததாக கருதப்பட்ட இத்தாலி மற்றும் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊரில் இருப்பதாக தெரியப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, இவர்கள் இருவரும், தங்கள் பாஸ்போர்ட்டை, தாய்லாந்தில் தவறவிட்டவர்கள். எனவே, இந்த பாஸ்போர்ட்டை திருடியவர்கள், மலேசிய விமானத்தில் பயணித்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இதே போல, சீனாவை சேர்ந்த இருவரும், போலி பெயரில் டிக்கெட் எடுத்து பயணித்துள்ளனர். எனவே, இந்த நான்கு பேரும், பயங்கரவாதிகளாக இருக்கலாம். இவர்கள் விமானத்தைக் கடத்தி, கடலுக்குள் மூழ்கச் செய்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது

No comments:

Post a Comment