Monday, May 12, 2014

ரூ.200 கோடியை திருப்பி தரும் "ஆப்பிள்'

வாஷிங்டன் : உலகப் புகழ்பெற்ற, "ஆப்பிள்' நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு, 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை, அதன், "ஆப் ஸ்டோரில்' இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை, வாடிக்கையாளர்கள், அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், குழந்தைகள் தங்களுடைய அனுமதியின்றி, மென்பொருட்களை வாங்குவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை திருப்பித் தர நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்த மொபைல் போன்களில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை பதிவு செய்தபின், 15 நிமிடங்களுக்கு, யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்; அந்த சமயத்தில், குழந்தைகள் வரம்பின்றி, தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை வாங்க முடியும்; இதுகுறித்து, வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த மொபைல் போனை பயன்படுத்தும் குழந்தைகள், "கிட்ஸ்' ஸ்டோரில் இருந்து, 30 ஆயிரம் முதல் 1.60 லட்சம் ரூபாய் வரையுள்ள அப்ளிகேஷன்களை வாங்கியுள்ளனர். மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ள, ஒரு பெண்மணி, அவரது மகள் வாங்கிய விளையாட்டு அப்ளிகேஷனுக்காக, 1.60 லட்சம் ரூபாய் செலவிட்டதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முதல், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை, திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது; ஆப் ஸ்டோருக்காக, ஏறக்குறைய மூன்று கோடி வாடிக்கையாளர்களுக்கு, இமெயில் மற்றும் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம், என்று ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி, டிம் குக் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment